http://en.wikipedia.org/wiki/11_July_2006_Mumbai_train_bombings
காலையில் புறப்படும் போது
கால்களை கட்டிக்கொண்டு
கண்ணை கசக்கிய
ஒன்றரை வயது - என்
குழந்தை வாசலில்
காத்திருப்பாளோ - என்
வருகைக்காக !!
வேலை முடிந்து
வீட்டுக்கு வரும்போது
வாங்கி வரும் இரண்டு
முழம் பூவினுள் தான்
இருக்கிறது எந்தன் உலகம்
என்பாளே என்னவள் -
எங்கே சென்று என்னை
தேடுவாள் !!
இரண்டு நாளாய்
வரும்போது வாங்கவேண்டும்
என்று நினைத்து
நினைத்து மறந்துவிட்ட
அந்த ஒற்றை
தலையாட்டிப் பொம்மையே
என் மகளுக்காக - இனி
வாங்கவே முடியாதோ !!
கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து சேர்த்து
சொந்தமாய் வீடு
கட்டவேண்டுமென்று
கண்ட கனவும்
காற்றோட போய்விட்டதோ !!
எனக்காக எதுவும் வேண்டாம்
என்று சொல்லி சொல்லியே
எந்த கனவும் தனக்காக காணாத
என்னவளுக்கு என்ன
கொடுக்கப்போகிறேன் இறுதியாய் !!
வாழ்க்கையேத்
தேடித்தேடியே பழகிவிட்ட
எனக்கு -
எந்தன் உடலையும்
தேடித்தான் கண்டுப்பிடிப்பார்களோ
எந்தன் உறவினர்கள் !!
சொல்லிக்கொண்டு
வருவதில்லை
மரணம் - ஆனால்
உயிருடன் உடலையும்
உரித்து எடுத்துச்செல்ல
உரிமை கொடுத்தது
யாருக்கு?
என்னை இப்படி சிதைத்து
இங்கு வீசி எறிந்து
வேடிக்கை பார்க்கும்
எந்தன் சகோதரர்களே
இனியும் வேண்டாம்
இப்படி ஒரு
விளையாட்டு !!
எதைத் தேடி
இந்தப் பயணம்?
எதைச் சொல்லி
என்ன பயன்...
உயிர் பிரியும் தருணம்
உரக்க உச்சரித்தால்
மரண வாக்குமுலமாகி
விடுமோ என்ற
அச்சத்தில் -
நினைவு
மயங்கும் நொடியில்
தோன்றி மறைகிறது
எண்ணங்கள்
--மாதவன்