புதன், 14 ஜூலை, 2010

உரக்க உச்சரித்தால் மரண வாக்குமுலமாகி விடுமோ!!

11 ஜூலை 2006  அன்று நடந்த மும்பை இரயில் வெடிகுண்டு விபத்தின் பாதிப்பில் அப்போது எழுதிய  கவிதை...

http://en.wikipedia.org/wiki/11_July_2006_Mumbai_train_bombings



காலையில் புறப்படும் போது
கால்களை கட்டிக்கொண்டு
கண்ணை கசக்கிய
ஒன்றரை வயது - என்
குழந்தை வாசலில்
காத்திருப்பாளோ - என்
வருகைக்காக !!

வேலை முடிந்து
வீட்டுக்கு வரும்போது
வாங்கி வரும் இரண்டு
முழம் பூவினுள் தான்
இருக்கிறது எந்தன் உலகம்
என்பாளே என்னவள் -
எங்கே சென்று என்னை
தேடுவாள் !!

இரண்டு நாளாய்
வரும்போது வாங்கவேண்டும்
என்று நினைத்து
நினைத்து மறந்துவிட்ட
அந்த ஒற்றை
தலையாட்டிப் பொம்மையே
என் மகளுக்காக - இனி
வாங்கவே முடியாதோ !!

கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து சேர்த்து
சொந்தமாய் வீடு
கட்டவேண்டுமென்று
கண்ட கனவும்
காற்றோட போய்விட்டதோ !!

எனக்காக எதுவும் வேண்டாம்
என்று சொல்லி சொல்லியே
எந்த கனவும் தனக்காக காணாத
என்னவளுக்கு என்ன
கொடுக்கப்போகிறேன் இறுதியாய் !!

வாழ்க்கையேத்
தேடித்தேடியே பழகிவிட்ட
எனக்கு -
எந்தன் உடலையும்
தேடித்தான் கண்டுப்பிடிப்பார்களோ
எந்தன் உறவினர்கள் !!

சொல்லிக்கொண்டு
வருவதில்லை
மரணம் - ஆனால்
உயிருடன் உடலையும்
உரித்து எடுத்துச்செல்ல
உரிமை கொடுத்தது
யாருக்கு? 

என்னை இப்படி சிதைத்து
இங்கு வீசி எறிந்து
வேடிக்கை பார்க்கும் 
எந்தன் சகோதரர்களே 
இனியும் வேண்டாம்
இப்படி ஒரு
விளையாட்டு !!

எதைத் தேடி
இந்தப் பயணம்?

எதைச் சொல்லி
என்ன பயன்...

உயிர் பிரியும் தருணம்
உரக்க உச்சரித்தால்
மரண வாக்குமுலமாகி
விடுமோ என்ற
அச்சத்தில் -
நினைவு
மயங்கும் நொடியில்
தோன்றி மறைகிறது
எண்ணங்கள்

--மாதவன்








சனி, 3 ஜூலை, 2010

புதுமொழி வேண்டும்

இன்னும் இரு தினங்களில்
இனியதோர் நாள்
உதயமாகப்போகிறது - ஆம்
எந்தன் தேவதையின்
இந்த உலகம் பார்த்த
அந்நாளில்
அவளை வாழத்தவேண்டும்
ஆனால் -  அந்த
காதலுக்கு ஒரு காப்பியம்
கண்ட கம்பன் முதல்
உலகத்தேடலுக்கு ஓராயிரம் உரை
உறைத்த வள்ளுவன் வரை
எவனும் கண்டிராத
வார்த்தைகள் கொண்டு - அவளை
வர்ணிக்க வேண்டும்!


அகத்தியன் அவனின்
அகத்தினிலிருந்து தோன்றி
அணிகலன் கொண்டு
அலங்கரிக்கப்பட்ட அந்த
அழகுத்தமிழ் வார்த்தைகள்
வேண்டும் எனக்கு!


இன்னாநாற்பது,இனியவை நாற்பது,
இதனோடு காப்பியங்கள் ஐந்து,
அகநானூறு,புறநானூறு,
இரண்டோடு காவியங்கள் சில,
நற்றிணை,குறுந்திணையுடன்,
நாலாயிரதிவ்வியப்பிரபந்தம் முழுவதிலிருந்தும்,
நானறிந்த தமிழ் அனைத்திலிருந்தும்,
படித்தது,படித்ததில் அறிந்தது,
தேடியது,தேடியதில் திகட்டியது,
கற்றது,கற்றதில் நின்றது,
காற்றில் கரைந்தது,
காணமல் களவு போனது,
சுவற்றில் பதிந்தது,
ஏட்டில் எழுதியது,
எட்டுதிசையிலிருந்தும் எடுத்த
எந்த வார்த்தைகளைக் கொண்டு
எத்தனை வகையில் கோர்த்தாலும்  
என்னவளை ஏற்றி 
என்னால் கவி புனையமுடியவில்லை!


ஆண்டவன் அவனிடம் 
அறைகூவடுலிகிறேன் -  
எந்தன் காதலை புகழ்ந்து
என்னை கவிஞனாக்குமுன்
என்னவளை வர்ணிக்க
எனக்கு வார்த்தைகள் சில
வரமாய் கொடு!  
  
சுந்தர தமிழைக்   கொணர்ந்து
முதுமொழியில் அறம் கோர்த்து
முக்கனி சுவை சேர்த்து 
புதுமொழி ஒன்று 
பொங்கும் அமுதமாய் 
தித்திக்கும் ஊரணிகள் சில 
எந்தன் நெஞ்சில் 
சுரக்கச் செய் - நான்
கவி பாடவேண்டும்  - அவள் 
செவி குளிர ...........  
   

திங்கள், 14 ஜூன், 2010

எப்படி பெண்ணே!


பெண்ணே....
என்னை விட்டு விலகும்போது
எந்தன் ஆறாவது அறிவையும்
ஏனடி எடுத்துச் சென்றாய்!

வேண்டாம் என்றுசொல்லிவிட்டு
வேண்டுமென்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கிறாயடி!
மறுத்தல்தான் பதில் என்றால்
மௌனமாய் இருந்தபோதே
மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பேனடி!
தோன்றுவது எல்லாம் முடிவில்
தோல்வியே தேடும் என்றால்
துவழாமல் இருப்பது எப்படி பெண்ணே!

ஞாயிறு, 13 ஜூன், 2010

எப்பொழுது வாழ்த்துவாய்


மௌனமானவளே -
வாழ்த்துகளை கூட வரைமுறைக்குள்
வைத்து தைத்துக்கொள்கிறாயடி -

காற்றோடு வந்து தான் உன் காதில்
கவிதை சொல்லவேண்டும் எனில்
காற்றினுள் கரைந்துவிடவும்
தவமிருப்பேனடி...

சுவாசமே வேண்டாமென்று - நீ
சரணம் பாடும்போது
சுவாசிக்க எப்படி தோன்றுமடி

மீண்டும் ஒருமுறை யோசித்துப்பாரடி -
காதலாய் ஏற்றுக்கொள்ளாவிடினும்
கவிதையாய் ரசித்துப்பாரடி....

சனி, 12 ஜூன், 2010

ஒரு தேடலின் விடை




உன்னைத்தேடி உன்னைத்தேடி
உயிரின் ஒரு பாதியை
உருக்கி விட்டேனடி....

ஊற்றின் உஷ்ணத்தை
உன்னுடைய முச்சுக்காற்றுக்கு
உவமேயம் செய்தேனடி - ஆனால்
உயிர்ப்பின் அவசியம்
உணர மறந்தேனடி...

தவத்தினை மெச்சி
தோன்றிய கடவுளிடம்
வரமாய் வேண்டும்
என்று உன்னை கேட்டால்
கைபிசைந்து நிற்கிறானடி...

ரகசியம் ஒன்று

தேவதையே....
 
உன்னிடம் சொல்லாத ரகசியமா....
உன்னிடம் சொல்ல முடியாமல்
ஒளித்து வைத்துகொள்ள
உயிரோட்டமாய் ரகசியம்
ஒன்று சொல்லடி...

 
உன்னை காதலிப்பது இல்லாமல்.

பெண்ணின் பருவங்கள்

குறிப்பு - சங்க காலத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது .அவைகள்  பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.
                  ஒவ்வொரு பருவமும்  முன்று வருடங்களை கொண்டது.  
ஒவ்வொரு பருவத்தைப் பற்றியும் சில வரிகளில்....  


பேதை அவள் தோன்றும் போதே
பெருமை சேர்க்கிறாள்
பிரிதொரு தோன்றலுக்கு
பிம்பமாய்...


பெதும்பை எனின் போதினும்
பொதிகைமலை தென்றலை
பொதியை சுமக்க
புதிதாய் பூக்கிறாளே...


மங்கை அவள்
மனதிற்குள் தேக்கிவைத்திருக்கிறாள்
மின்னல் ஒன்று
மழைசாரலோடு.
இதயத்தோடு இணைத்து
இணைத்து தைத்திருக்கிறாள்
இதமாய் தொடங்கும்
உதயம் ஒன்று...


மடந்தையும் -
மண்ணில் மவுனத்தோடு  
மறைத்து வைத்த
விதையும் -
வீரியமற்று தான் போய்விடுமா...
தளிர் விடாமல் தலைகுனியுமா...
தரணி பார்க்காமல் போய்விடுமா...


அரிவை அவள்
அன்று முதல்
அடங்கும் வரை
அடங்கியும் இருப்பாள்
அடக்கியும் பார்ப்பாள்


தெரிவை... தெரிவை...
ஆறாவது பருவத்தினுள்
ஆரவாரத்துடன் தான் நுழைகிறாள் -
அந்தி வானத்து அழகுடன்
அன்று மலர்ந்த மல்லிகையாய்
அர்த்தமுள்ள சிரிப்புடன்...


பேரிளம் பெண் -
பருவத்தினுள்
பக்குவப்பட்டது,
பாசத்திற்கு ஒரு 
வாசம் சேர்த்து 
கொடுத்துக் கொண்டேயிருக்கும்
அமுத சுரபியோ
அந்த பருவம்...


பெண் - சொற்களில்
அர்த்தங்கள் ஆயிரம்
ஆனால் - ஆதாரமே
அந்தச் சொல்தானோ?
  
தோன்றலில் - பெண்
தொடக்கத்தில் - பெண்
பாசத்தில் - பெண்
பணிவில் - பெண்
கனிவில் - பெண்
கருவில் - பெண்
அழிவில் - பெண்
ஆக்கத்தில் - பெண்
வெற்றியில் - பெண்
வீரத்தில் - பெண்
தோல்வியில் - பெண்


பெண்ணுக்கு பெண்தான்
உருவக அணியோ?


                           - மாதவன்